சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை மூடக்கோரி சாலை மறியல் – வழக்கு பதிவு!

public

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததால் 4 மணி நேரம் பரபரப்பும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கோவிந்தராஜ பட்டினம் செல்லும் சாலையில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இந்தச் சுரங்கம் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கம் மீண்டும் செயல்படும் விதமாக சுரங்கத்தில் உள்ள தண்ணீரை சக்திவாய்ந்த மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.
இதையறிந்த கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்குச் சென்று தண்ணீர் வெளியேற்றுவதை நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தினர். மேலும் சுரங்கத்தில் இருந்து தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் வயல்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளில் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளதாகவும், வயலப்பாடி, வீரமநல்லூர், காரைப்பாடி, ஓலைப்பாடி, கோவிந்தராஜபட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சுரங்கத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வயலப்பாடி-வேப்பூர் சாலையில் கோவிந்தராஜ பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை இயக்கக் கூடாது என்று கூறி, அந்த சுரங்கத்தை மூடக்கோரியும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த வழியாக சென்ற அரசு பஸ்ஸை சிறைப்பிடித்தும் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) வளவன், குன்னம் தாசில்தார் அனிதா, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகத்தினர் உரிய அனுமதி பெற்று தற்போது சுரங்கத்தைச் செயல்படுத்த உள்ளனர். எனவே பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய வகையில் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக மொத்தம் 21 பேர் மீது குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *