கடற்பசு பாதுகாப்பகம் : ரூ.5 கோடி ஒதுக்கீடு!


தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பாக் விரிகுடா இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு ஆழமற்ற கடல் ஆகும். பாக் விரிகுடா அதன் சுற்றுச்சூழலில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் அனைத்து முக்கிய குழுக்களையும் கொண்ட பல்லுயிர் வளமாக உள்ளது.
அதில், முதன்மை இனமாக கடற்பசு உள்ளது. ஆனால்,கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பு மற்றும் இறைச்சி, பற்கள், தோல் போன்றவற்றிற்காக கடற்பசுக்கள் அதிகளவில் வேட்டையாடப்படுவதால், இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலும் உலகம் முழுவதுமே 200 முதல் 250 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 150 கடற்பசுக்களை மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தியிலேயே பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையிலுள்ள கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்க மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் "கடற்பசு பாதுகாப்பகம்" அமைக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் வனத் துறை அமைச்சர் ராமசந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் விரிவான திட்ட அறிக்கை, கள ஆய்வு நடத்த முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-வினிதா