வினாத்தாள் லீக்: இரண்டு பள்ளிகளுக்கு நோட்டீஸ்!


திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி இரண்டு தனியார் பள்ளிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொதுத் தேர்வு அடிப்படையில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுவரை 10ஆம் வகுப்பு ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு வணிக கணிதம், கணிதம், உயிரியல், பொருளியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்கள் தேர்வு நாட்களுக்கு முன்னதாக அடுத்தடுத்து வெளியானது. இருப்பினும், அதே வினாத்தாள்கள் கொண்டே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவர்களிடையே இருக்கும் அச்சத்தை போக்கும் வகையில், திருப்புதல் தேர்வு பயிற்சிக்காக மட்டுமே. இந்தாண்டு கட்டாயம் பொதுத் தேர்வு பாதுகாப்பான முறையில் நடத்தப்படும். திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசி மற்றும் போளூரில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை மாணவர்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்ட திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பள்ளிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
-வினிதா