விருதுநகர் மாவட்டத்தில் ஆமணக்கு விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்து என்பதால் பலரும் இதை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோயில்களுக்கு விளக்கேற்றப் பயன்படும் பலவிதமான எண்ணெய் வகைகளில் சிறப்பாக குறிப்பிடப்படுவது ஆமணக்கு எண்ணெய்தான்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கோட்டைப்பட்டி, சிப்பிபாறை, ஏழாயிரம் பண்ணை, வெற்றிலையூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் ஆமணக்கு செடிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. சென்ற ஆண்டு குவிண்டாலுக்கு 4,000 ரூபாயாக இருந்தது. தற்போது குவிண்டாலுக்கு 5,000 ரூபாயாக விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள கோட்டைப்பட்டி விவசாயி ஒருவர், “கோட்டைப்பட்டி பகுதியில் நாட்டாமணக்கு, காட்டாமணக்கு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. 90 நாட்கள் பயிரான ஆமணக்கு செடிகளுக்குக் குறைவான தண்ணீர் மற்றும் குறைவான பராமரிப்பு இருந்தால் போதுமானது. இது நன்கு வளரக்கூடியது.
தற்போது ஆமணக்கு செடியின் இடையே ஊடுபயிராக கொத்தமல்லி, நிலக்கடலை, சின்ன வெங்காயம் ஆகியவை பயிரிட்டுள்ளோம். ஆமணக்கு ஓர் ஏக்கருக்கு ஒரு டன் வரை கிடைக்கிறது. மேலும் கிலோ ரூ.40 முதல் ரூ.43 விலை கிடைக்கிறது. விளக்கெண்ணெய் தயாரிக்க ஆமணக்கு விதைகளைப் பயன்படுத்துவதால் மார்க்கெட்டில் இதற்கு அதிக மவுசு உள்ளது.
சங்கரன்கோவில், கோவில்பட்டி, விருதுநகரில் இருந்து விவசாயிகள் இதை வாங்கி செல்கின்றனர். தற்போது குவிண்டாலுக்கு 1,000 ரூபாய் விலை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
.