2022 ஆம் ஆண்டு 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி போன்று கல்வி துறையில் உள்ள காலி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.
இந்த நிலையில் இன்று(ஜனவரி 23) 2022ஆம் ஆண்டில் 9,494 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில், 2,407 பணியிடங்களை நிரப்புவதற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏராளமானோர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை காலி பணியிடங்கள் உள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இரண்டாம் நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் இரண்டாம் வாரத்தில் நடைபெறும். 3,902 இடைநிலை ஆசிரியர்கள், 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட மொத்தம், 4,989 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. 167 காலிப் பணியிடங்களுக்கான SCERT விரிவுரையாளர்களுக்கான தேர்வும் ஜூன் இரண்டாம் வாரத்தில் நடைபெறும். மே மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 104 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 493 பணியிடங்களுக்கான தேர்வு, நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.
மேலே கூறப்பட்ட தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுபடவும் வாய்ப்புகள் உள்ளன என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,”