இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் மிக பெரிய தடுப்பூசி செலுத்தும் பணியானது புதிய உச்சம் தொட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி ஒவ்வொரு வயதினருக்கும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில்,” பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் மிக பெரிய தடுப்பூசி செலுத்தும் பணி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 160 கோடியை கடந்து உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்பும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
**15-18 வயதினர்**
நாட்டில் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கிய 17 நாட்களில் 52 சதவிகித சிறுவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மற்ற வயதினர்களை விட 15-18 வயதினர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். தற்போதுவரை 52 சதவிகிதத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் 91 சதவிகிதத்தினரும், இமாசல பிரதேசத்தில் 83 சதவிகிதத்தினரும், மத்திய பிரதேசத்தில் 72 சதவிகிதத்தினரும் தமிழ்நாட்டில் 58 சதவிகிதத்தினரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
**-வினிதா**
�,