போலியோ சொட்டு முகாம் தேதி மாற்றம்!


கொரோனா பரவல் காரணமாக வருகிற 23ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வருகிற ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் கூடுதலான பணிச்சுமையை உண்டாக்கும். அதனுடன் சொட்டு மருந்து செலுத்த வரும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் தேதியை மாற்றி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்தாண்டு இந்தியா முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக 24 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-வினிதா