ஆட்டோ-டாக்சியில் அதிக கட்டணம்: நடவடிக்கைக்கு உத்தரவு!


தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16 என முழு ஊரடங்கு அமலில் இருந்த இரு தினங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் காவல்துறையினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள். ஊரடங்கு காலத்தில் சிலர் காவல்துறையினரை தாக்கிய போதும் காவலர்கள் துறைக்குரிய பொறுப்புடன் பணியாற்றியுள்ளீர்கள். பொதுமக்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட போதும் போலீசார் பொறுப்புடன் பணியாற்றினர். அதற்கு அனைத்து காவலர்களுக்கும் பாராட்டுகள். மாவட்ட எஸ்.பிக்கள், காவல் ஆணையர்கள் ரோந்து சென்று அறிவுரை வழங்கியது துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது.
எனினும்,முழு ஊரடங்கு நாட்களில் வெளி ஊர் சென்று திரும்பும் பயணிகள் ஆட்டோ,டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும்,சில ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.எனவே,வெளியூர் சென்று திரும்பும் பயணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ,டாக்சிகள் கிடைப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக,முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-வினிதா