�
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (ஜனவரி 14) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய மூன்று பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஜனவரி12ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஊர்வலமாகப் புறப்பட்டது.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்து வருகின்றனர். பாரம்பரிய முறைப்படி திருவாபரண ஊர்வலத்துடன் பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி ஒருவர் வருவது வழக்கம். அதன்படி மூலம் நாள் சங்கர் வர்மா திருவாபரண ஊர்வலத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.
இந்த ஊர்வலம் சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக இன்று (ஜனவரி 14) மதியம் பம்பை கணபதி கோயிலை வந்தடையும்.
பின்னர் அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் மாலை 6.20 மணிக்கு சபரிமலை சந்நிதானம் கொண்டு செல்லப்படும். அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு திருவாபரணங்கள் ஐயப்ப சாமிக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.
மகர விளக்கையொட்டி பக்தர்கள் சந்நிதானம், பம்பை உள்ளிட்ட எட்டு இடங்களில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
**-ராஜ்**
.�,