கொரோனா காரணமாக ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. கல்லூரிகளில் கடந்த ஓராண்டாகவே செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றன. கொரோனா பரவல் சற்று குறைந்திருந்ததை அடுத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. மேலும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிபிறகு நேரடி முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவம் தவிர அனைத்து வகை கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் ஸ்டடி லீவ் ஆக கருதி தேர்வுக்கு தயாராக வேண்டும். ஒருவேளை ஜனவரி 20ஆக் தேதிக்கு பிறகும் கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடைபெறாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தேர்வை எப்போது நடத்தலாம்? என்பது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
**-வினிதா**
�,