ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அசைவ உணவுப்பிரியர்களுக்கு மாற்று சோயா. சாப்பிட சுவையாகவும், மெல்லுவதற்கு சாஃப்டாகவும் இருக்கும் சோயாவில் வித்தியாசமான கோலா உருண்டை செய்து இந்தப் புத்தாண்டு நாளை இனிதாக்கலாம்.
எப்படிச் செய்வது?
இரண்டு கப் சோயா உருண்டைகளை வெந்நீரில் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், நசுக்கிய எட்டு பூண்டு பற்கள், நறுக்கிய பத்து சின்ன வெங்காயம், ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி பிறகு ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, புதினா, கால் கப் பொட்டுக்கடலை மற்றும் அரை கப் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, இறுதியாக ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்துப் புரட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு ஊறிய சோயாவைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றிச் சேர்த்து நன்கு பிசைந்து, தேவைப்பட்டால் மட்டும் நீர் தெளித்து பிசையலாம். இதை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சோயா கோலா உருண்டை தயார்.
சிறப்பு
மட்டன் கோலா உருண்டை போல் இருக்கும் இது, அனைவருக்கும் ஏற்றது. புரதம் நிறைந்தது.
�,