இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் இன்ஸ்டன்ட் பொடி வகைகளும் முக்கிய இடம்பிடித்துள்ளன. அலுவலகம் செல்லும் அவசரத்தில், வேலை பளு அதிகமிருக்கும் நேரத்தில் உதவும் பொடி வகைகள் இந்தியாவிலும் அதிகம். வீட்டில் புளிக்காய்ச்சல் செய்ய நேரமில்லாதபோது, அவசரத் தேவைக்கு உதவும் இந்த புளியோதரைப் பொடி செய்து வைத்துக்கொண்டு தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்ன தேவை?
வறுத்துப் பொடிக்க…
(மல்லி) தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெயில் வறுக்க…
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
எள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
புளி – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
*தனியாக வறுக்க…*
கறிவேப்பிலை – 2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
சாதம் கலக்க…
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வறுக்கப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் சட்டியில் வாசனை வரும் வரை வறுத்து, பொடித்துக்கொள்ளவும். எண்ணெயில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களை (புளி, மஞ்சள்தூள் நீங்கலாக) ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுத்துக்கொண்டு, அத்துடன் புளியையும் தட்டி வறுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூளையும் சேர்த்து வறுத்து, அனைத்தையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். தனியாக வறுக்கக்கொடுத்துள்ள கறிவேப்பிலையையும் வேர்க்கடலையையும் எண்ணெயில் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
எண்ணெயில் வறுத்து அரைத்த பொடி, வெறும் சட்டியில் வறுத்து அரைத்த பொடி, வறுத்த வேர்க்கடலை – கறிவேப்பிலை இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிதளவு உப்பு கலந்து வைத்துக்கொள்ளவும்.
புளியோதரை சாதம் கலக்கும் முறை
ஒரு தாம்பாளத்தில் சாதத்தைப் பரப்பி, நல்லெண்ணெய், உப்பு சேர்த்து, ரெடியாக உள்ள புளியோதரைப் பொடியை அதில் கலந்து பரிமாறவும். இந்த ருசியான புளியோதரையை வடகம், அப்பளத்துடன் பரிமாறலாம்.