திருவண்ணாமலையில் பெண் காவலருக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் யார் மீது தவறு உள்ளது என்பதை அம்மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை போளூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராதா என்ற பெண் காவலர் நேற்று திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து செய்யாறு செல்லும் அரசு பேருந்தில் பணிக்காகச் சென்றுள்ளார். அப்போது டிக்கெட் எடுக்கக் கூறிய நடத்துநரிடம், பணி நிமித்தமாக மாவட்டத்திற்குள் பயணம் செய்வதற்கு டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அடையாள அட்டை இருந்தால் போதும் என்று கூறினார்.
இதை ஏற்காத நடத்துநர், அந்த மாதிரி எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. அதனால் டிக்கெட் எடுங்கள் அல்லது வாரண்ட் கொடுங்கள் என்று கேட்டார். இதனால் பெண் காவலருக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டிலிருந்து பணிக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணித்த பெண் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து, அடையாள அட்டை இருப்பதாகக் கூறி பேருந்து நடத்துநரிடம் பிரச்சினையை உருவாக்கியுள்ளார். முதல்வர் உத்தரவின்படி புதிய அடையாள அட்டை வரும்வரை, பணி நிமித்தமாகவே பேருந்தில் பயணித்தாலும் வாரண்ட் இல்லையென்றால் கட்டாயம் டிக்கெட் வாங்கித்தான் பயணம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அந்தத் தகவலை அனைவருக்கும் தெரியபடுத்தியிருக்கிறேன். ஆனால், அந்த விஷயத்தில் பெண் காவலர் ஒருவர் தவறு செய்துள்ளார். அதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பணி நிமித்தமாகச் செல்லும்போது கட்டாயம் வாரண்ட் கொண்டு செல்ல வேண்டும். வீட்டிலிருந்து பணிக்கு வரும்போது பேருந்தில் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் அனைவருக்கும் தெளிவுப்படுத்துகிறேன்” என்று கூறுகிறார்.
**-வினிதா**
�,