கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் ஒருபகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக தாய்-சேய் நல பிரிவில் மேற்கூரை இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதுவரை மருத்துவமனைகளில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இந்த நிலையில், கோவை பாலசுந்தரம் சாலையில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பகுதியில் உள்ள நிழற்கூரையில் ஒரு பாகம் இடிந்து விழுந்தது.
இதில், இன்று(நவம்பர் 26) பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
**-வினிதா**
�,