‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை, திருச்சி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக்குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார். இதன்படி 2015ஆம் ஜனவரி 1ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
இந்த நிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடு அடிப்படையில் முதன்முறையாக தர வரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 56 நகரங்கள் தர வரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2030ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் வெற்றிகண்ட நகரங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டன. இதில், சிம்லா, கோவை, சண்டிகார், திருவனந்தபுரம், கொச்சி, பனாஜி, புனே, திருச்சி, ஆமதாபாத், நாக்பூர் ஆகிய 10 நகரங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. மீரட், ஆக்ரா, கொல்கத்தா போன்ற நகரங்கள் மோசமான செயல்பாட்டுக்காக கடைசி இடங்களில் உள்ளன.
**-ராஜ்**
.�,