சூடான உணவை வாழையிலையில் வைத்து உண்ணும்போது இலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் தூண்டப்பட்டு நம் உணவுடன் கலந்து மிகுந்த பயனளிக்கும் என்பதால் வாழையிலையில் சாப்பிடுவது இன்றளவும் விருந்து விசேஷங்களில் நடைமுறையில் இருக்கிறது. இந்த வாழையிலை பேக்டு கொத்து பரோட்டாவும் அப்படிப்பட்டதே!
**என்ன தேவை?**
பரோட்டா – 4
வாழையிலை – 4 (சிறிய அளவு)
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பெல்லாரி வெங்காயம் – 2 (மீடியம் சைஸ்)
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
கேரட் – ஒன்று
பச்சைப் பட்டாணி – கால் கப்
குடமிளகாய் – பாதியளவு
மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
முந்திரிப்பருப்பு (விருப்பப்பட்டால்) – 4 – 5
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
பச்சைப் பட்டாணி தவிர்த்து எல்லா காய்களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு, முந்திரி தாளித்து தக்காளி தவிர்த்து மற்ற காய்களைப் போட்டு வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, தக்காளி, மசாலா வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். காய்கள் வெந்து, தண்ணீர் சிறிதளவு வற்றியவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக ஆக்கவும். இரண்டு வாழையிலைகளை ப்ளஸ் (+) வடிவில் வைத்து நடுவில் பரோட்டாத்துண்டுகள் வைத்து, காய்கறிக் கலவையை ஊற்றி இறுக்கி மடித்துவிடவும்.
ஒரு மண் பானை/கடாயை சன்னமான தீயில் சூடேற்றி, வாழையிலையை வைத்து, மூடி போட்டு 5 – 8 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் அதை வெளியில் எடுத்து, இலைகளைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவி, சூடாக தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.
**[நேற்றைய ரெசிப்பி : வாழைத்தண்டு மொஹிங்கா!](https://www.minnambalam.com/public/2021/10/08/1/plantain-pith-mohinga)**
.�,