திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் அலிபிரி நடைபாதை முழுவதுமாக மூடப்பட்டது. மேலும் இந்த அடைப்பின்போது பல புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிறிது சிறிதாக தளர்வுகள் அமலாகி வருகின்றன. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அலிபிரி நடைபாதையில் உள்ள மேற்கூரை புனரமைக்கும் பணிகள் நடந்துவருவதை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளாளர்களிடம் பேசிய அவர், “திருப்பதியில் அலிபிரியில் இருந்து கோயில் வரை நடைபாதை மேற்கூரை நன்கொடையாளர்கள் உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வரும் அக்டோபர் 7 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தின்போது ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் நடைபாதை மூலம் பாத யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். நடைபாதை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி பாத யாத்திரை செல்ல வசதியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.
�,