கைத்தடியால் சிறுத்தையை விரட்டிய மூதாட்டி!

public

மும்பையில் தன்னைத் தாக்கிய சிறுத்தையைக் கைத்தடி துணையுடன் மூதாட்டி எதிர்த்துப் போராடிய நிகழ்ச்சி வைரலாகி வருவதுடன் அந்தப் பகுதி மக்களுக்கு சிறுத்தையின் நடமாட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் அடர்ந்த காடு இருக்கிறது. இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்தப் பகுதியில் சிறுத்தை தாக்கி ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். தற்போது மீண்டும் மூதாட்டி ஒருவரை சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது.

ஆரே காலனியில் பால்பண்ணை அருகில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் 68 வயது நிர்மல் சிங் என்ற மூதாட்டி இரவு 8 மணியளவில் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்து திண்ணையில் வந்து அமர்ந்தார். ஏற்கெனவே சிறுத்தை ஒன்று அருகிலிருந்த புதருக்குள் மறைந்திருந்தது. அந்த சிறுத்தை மூதாட்டி மீது பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் இருந்த கைத்தடியின் உதவியுடன் சிறுத்தையை எதிர்த்துப் போராடினார். மூதாட்டி மீது மீண்டும் சிறுத்தை பாய முயன்றது. ஆனால் மூதாட்டி தன்னிடம் இருந்த கைத்தடியால் சிறுத்தையை விரட்டியதால் சிறுத்தை புதருக்குள் ஓடிச்சென்றது.

காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரி இதுகுறித்து கூறுகையில், “பொதுமக்களை அடிக்கடி தாக்கும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஆரே காலனியில் வசிக்கும் உதய் என்பவர், “ஒரு சிறுத்தை அடிக்கடி பொதுமக்களைத் தாக்குகிறது. பொதுமக்கள் யாரையாவது கொல்வதற்கு முன்பு சிறுத்தையைப் பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். பொது மக்கள் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வீடுகள் கட்டியிருப்பதால்தான் இந்தச் சிக்கல் என்கிறார்கள் சிலர்.

இதற்கிடையே இதே ஆரே காலனியில் சிறுத்தைக் குட்டி ஒன்று தனது தாயைப் பிரிந்து தனியாக வந்துவிட்டது. அந்தக் குட்டியைத் தாயுடன் சேர்த்து வைக்க வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டு நாள்களாகப் போராடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி அச்சத்தில் வாழ்கின்றனர்.

**-ராஜ்**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *