கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை ஒன்று பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேல்தட்டப்பள்ளம் எனும் மலை வழிப்பாதை உள்ளது. இந்த காட்டுப் பகுதியில் வரும் வாகனங்களை யானை கரடி போன்ற வனவிலங்குகள் வழிமறிப்பது அன்றாடம் நடைபெறும் நிகழ்வாக மாறியுள்ளது.
Elephant Nilgiris !
மலைப்பாதையில் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை.#Elephant #Nilgiris pic.twitter.com/Aux9GpMTfJ— 𝕹𝖆𝖓𝖉𝖆𝖐𝖚𝖒𝖆𝖗 𝕾𝖚𝖗𝖚𝖑𝖎𝖓𝖆𝖙𝖍𝖆𝖓 (@NandaSuruli) September 25, 2021
இந்நிலையில், இன்று(செப்டம்பர் 25) காலை 9 மணியளவில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மேல்தட்டப்பள்ளம் மலைப்பகுதியில் வழிமறித்த காட்டு யானை பேருந்தை நோக்கி ஓடி வந்தது. இதனால் ஓட்டுநர் பேருந்தை சிறிது தூரம் பின்னோக்கி கொண்டு சென்றார். சிறிது நேரம் கழித்து யானை தன் தும்பிக்கையால் பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்தது. இதனால் அச்சமடைந்த பயணிகள் பேருந்தை விட்டு இறங்குவதா, உள்ளே இருப்பதா என்று தெரியாமல் பயத்தினால் பேருந்திற்குள்ளே அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டிருந்தனர். அதுவரை இருக்கையில் அமர்ந்திருந்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார். சிறிது நேரம் பேருந்தை சுற்றி வந்த யானை, பின் தன் வழி நோக்கி சென்றது. இதையடுத்து பேருந்து மீண்டும் பயணத்தை தொடங்கியது.
இதனை அந்த பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வன எல்லைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு, வனவிலங்குகள் ஊடுருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”