உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 48ஆவது தேசிய மேலாண்மை மாநாட்டில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா பாதிப்புக்குப் பின், நாடு நிலையை அடைய, உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு, தொழிலாளர் மற்றும் உற்பத்தி சந்தையில் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தவர், கொரோனா தொற்று நோய், வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளை மிகவும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.
மேலும், “எதிர்காலத்தில் வாழும் சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதே, நம் முயற்சியாக இருக்க வேண்டும். தனியார் நுகர்வு மற்றும் தேவைகளை அதிகரிக்க வேண்டும்” என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால், நேற்று வெளியிட்ட அறிக்கையில், தனது கணிப்பைக் குறைத்துள்ளது.
அதன்படி, இந்திய பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலையால் பொருளாதார மீட்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அதுவே வளர்ச்சி குறைய காரணம் என்று தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், மீதியுள்ள இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரம் வலிமையாக மீண்டெழும் என்றும் கூறியுள்ளது.
**-ராஜ்**
.�,