�
அமெரிக்க விசா தொடர்பாக டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்களை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கிப் பணிபுரிவதற்கு அந்த நாடு எச்-1பி விசா வழங்கி வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது. இந்த விசா, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற வகையில் குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. இந்த விசாவைத்தான், வெளிநாட்டினரைப் பணியாற்ற அமெரிக்க நிறுவனங்கள் நம்பி உள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் 65,000 பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. மேலும் அந்த நாட்டில் உயர்படிப்பு படித்த வெளிநாட்டினர் 20,000 பேருக்கும் இந்த விசா தரப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்று முழங்கினார்.
மேலும், ஊதியத்தின் அடிப்படையில்தான் எச்-1பி விசா என புதிய விதியைக் கொண்டு வந்தார். அதிக சம்பளம் வாங்குவோருக்குத்தான் அமெரிக்க விசா வழங்கப்படும் என்பதால், இது வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதில் தடைக்கல்லாக அமைந்தது. இதை எதிர்த்து கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்ரே ஒயிட், டிரம்ப் கொண்டு வந்த மாற்றத்தை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளார். இதன் மூலம் எச்-1பி விசா பெற காத்திருக்கும் இந்தியர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்.
**-ராஜ்**
.�,