தரமற்ற பச்சை தேயிலையைக் கொள்முதல் செய்த 100 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குநர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேயிலை வாரிய தென்மண்டலம் சார்பில் கடந்த சில மாதங்களாக தேயிலை எஸ்டேட்டுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேயிலை ஏல மையங்களில் தேயிலைத்தூள் மாதிரிகளை சரிபார்த்தல், கொள்ளளவுகளைக் கண்காணித்தல், கொள்முதல் செய்பவர்களின் விவரங்கள், பல்வேறு சட்டபூர்வ வருமானங்களை தாக்கல் செய்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் விதிமுறைகளை மீறிய 40-க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளுக்கும், 30 தேயிலை கழிவு நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 46 தேயிலை நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி தரமற்ற பச்சை தேயிலையைக் கொள்முதல் செய்தல், சுகாதாரமின்மை, முறையான தேயிலை விற்பனை குறித்த பதிவேடுகள் பராமரிப்பின்மை, தேயிலை வாரியம் நிர்ணயித்த அளவுக்கு மேல் பச்சை தேயிலையைக் கொள்முதல் செய்தல் உட்பட பல்வேறு விதிமீறல்களுக்காக 100 தேயிலை தொழிற்சாலைகளுக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகமாக தேயிலை கழிவுகளைப் பயன்படுத்தியது, தேயிலை விற்பனை குறித்த உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதது, அளவுக்கு அதிகமாக தேயிலைத்தூளை சேமித்து வைத்தது போன்ற விதிகளை மீறிய கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள இரண்டு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமங்கள் தேயிலை கட்டுப்பாட்டு ஆணை (விற்பனை) 9003-ன் படி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,