தமிழ்நாட்டைத் தொடர்ந்து டெல்லி, ஆந்திராவிலும் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிற நிலையில், வருகிற மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. கேரளாவில் ஓணம் பண்டிகையொட்டி அளிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளினால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அதனால்தான் பண்டிகை காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல், தேவைப்பட்டால் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.
இந்தியா முழுவதிலும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. வீடுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, ஆந்திராவிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வரிசையில் டெல்லி அரசும் இணைந்துள்ளது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.
கொரோனா அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று(செப்டம்பர் 8) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களில் இருந்து கொண்டாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டதற்கு பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
**-வினிதா**
�,