68 நாட்களுக்குப் பிறகு பயணிகளுடன் பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளும் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் வழியாக ரயில்கள் செல்லும்போது ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா என்பதை கண்டறிய ஐஐடி மூலம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்சார் கருவிகள் தூக்குப்பாலத்தை சுற்றி 80-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டன.இதனிடையே கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் தூக்குப்பாலத்தை கடந்து செல்லும்போது தூக்குப்பாலத்தில் அதிர்வுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
மேலும் தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மையை அதிகப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பாம்பன் தூக்குப்பாலம் வழியாக பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகள் மற்றும் தனி என்ஜினும் பலமுறை இயக்கப்பட்டு தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை சரியாக உள்ளதாக ஐஐடி கொடுத்த ஆய்வு அறிக்கையைத் தொடர்ந்து, பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்க தெற்கு ரயில்வே துறை அனுமதி வழங்கியது..இந்த நிலையில் 68 நாட்களுக்கு பிறகு பாம்பன் ரயில் தூக்குபாலம் வழியாக மீண்டும் பயணிகளுடன் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4.30 மணிக்கு பயணிகளுடன் பாம்பன் ரயில் பாலம் மற்றும் தூக்குப்பாலத்தை கடந்து ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து காலை 7.30-க்கு வந்த விரைவு ரயில், திருச்சியில் இருந்து வந்த பயணிகள் ரயில் பகல் 11.30 மணிக்கும் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து வந்தன. மதியம் 2.25-க்கு திருச்சி பயணிகள் ரயில், மாலை 6.10-க்கு சென்னை விரைவு ரயில், இரவு சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் வழக்கம் போல் ராமேஸ்வரம் ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன..
68 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பாம்பன் ரயில் பாலம் வழியாக பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பாலம் வழியாக வந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கடல் அழகையும் ரோடு பாலத்தையும் பார்த்து ரசித்தபடி பயணம் செய்தனர்.
அதேபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை நான்கரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது . காலை 7.10 மணிக்கு புறப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
**-ராஜ்**
.�,