ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் இரண்டு வகையான ஜியோ போன் நெக்ஸ்ட் – செப்டம்பர் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் ஜியோவின் இலவச 4ஜி என்ற அறிவிப்புக்குப் பின்னர்தான் இணையப் பயன்பாடு அதிகரித்தது. கொரோனா காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் விற்பனையும் மேலும் அதிகரித்தது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகளவு இல்லாத வீடுகளில்கூட குழந்தைகளின் படிப்புக்காக ஸ்மார்ட்போன் அதிகளவில் வாங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், விலை குறைவான ஸ்மார்ட்போன்கள் என்ற ஐடியாவோடு ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைகிறது ஜியோ. இணையத்தையே பயன்படுத்தாத பெரும்பான்மை மக்களை தனது Feature போனான ஜியோ போன் மூலமாக இணையத்தைப் பயன்படுத்த வைத்தது ஜியோ. ஸ்மார்ட்போனில் இருக்கும் சில வசதிகளை Feature போன்களில் கொண்டுவந்து இரண்டு வருடங்களில் 5 கோடி போன்களை விற்பனை செய்தது.
தற்போது மீண்டும் அதே போன்றதொரு திட்டத்துடன் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்திடாத மக்களை ஸ்மார்ட்போன் உலகிற்குள் கொண்டுவர, விலை குறைவான ஸ்மார்ட்போனான ‘Jiophone Next’-ஐக் இந்திய சந்தைக்குக் கொண்டுவர இருக்கிறது ஜியோ.
இதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார் முகேஷ் அம்பானி. புதிய ஜியோ போனைப் பற்றி பெரிதாக எந்தத் தகவல்களும் தெரிவிக்காமல், செப்டம்பர் 10ஆம் தேதி முதல் இந்த புதிய Jiophone Next விற்பனைக்கு வரும் என்று மட்டும் தெரிவித்தது ஜியோ.
இந்த நிலையில், எந்தப் பயனர்களைக் குறிவைத்து ஜியோ இந்தப் புதிய ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறது என்பது குறித்து Counterpoint Research சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, இந்தியாவின் மக்கள் தொகை 1.39 பில்லியன். அதில் 530 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்களுடன் சேர்த்து, 850 மில்லியன் மொபைல்போன் பயனர்களைக் கொண்டிருக்கிறது இந்தியா. மொபைல்போன்களையே பயன்படுத்தாதவர்கள் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்கள் என 540 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தாதவர்கள் மற்றும் Feature போனைப் பயன்படுத்துகிறவர்கள் என 520 மில்லியன் பயனர்களைக் குறிவைத்தே ஜியோ இந்தப் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது.
இந்தத் திட்டத்துக்காக கூகுளுடன் கைகோத்திருக்கிறது ஜியோ. கூகுள் 4.5 பில்லியன் டாலர்களை ஜியோவில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பல சிறப்பம்சங்களுடனே இந்த புதிய ஜியோ போன் வெளியாகவிருக்கிறது.
அதற்காக ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவான விலையில் அல்டரா அஃப்பர்டபிள் 4ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. ஜியோ போன் நெக்ஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், இரண்டு மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ரிலையன்ஸ் நிறுவனம் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது.
பேசிக் ஃபீச்சர்ஸ் வசதி கொண்ட ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் 5,000 ரூபாயும் மேம்பட்ட வசதி கொண்ட மற்றொரு ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் 7,000 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை குறித்து இன்னும் தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் 10 சதவிகிதம் கட்டணத்தை மட்டும் செலுத்தி ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம். எஞ்சிய கட்டணத்தை நீண்ட கால தவணையில் செலுத்தும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பிரைமல் கேபிடல் , ஐடிஎஃப்சி மற்றும் டிஎம்ஐ பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தவணை வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் வட்டி வசூலிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்தும் இந்த நிறுவனம் தெளிவாக விளக்கவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் ஐந்து கோடி ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை விற்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது.
**-ராஜ்**
.�,