2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்தது.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன. இதன் காரணமாக இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் காணப்பட்டது.
முந்தைய ஜனவரி – மார்ச் காலாண்டில் 1.6 சதவிகிதம் முன்னேற்றம் காணப்பட்டது. இந்த நிலையில், தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவல்படி 2021-22ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை ஏற்படாமல் இருந்திருந்ததால் இந்த வளர்ச்சி இன்னும் கூடியிருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம், கடந்த ஆண்டில் கடும் வீழ்ச்சி கண்ட வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் இந்தாண்டு 68.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜிடிபி வளர்ச்சியானது நன்கு அதிகரித்திருந்தாலும், கோவிட்-19-க்கு முன்பிருந்த பொருளாதார வளர்ச்சியை அடுத்த ஆண்டுதான் அடைய முடியும் என்று சொல்லி இருக்கிறார் பிரதமரின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்.
நம் நாட்டின் ஜிடிபி தொடர்ந்து வளர்ச்சி காண வேண்டும் எனில், தனியார் நிறுவனங்கள் இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்கிற நிலையே இருக்கிறது. தவிர, கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் இரண்டாம் காலாண்டில் நல்ல மாற்றம் தெரியும். ஆனால், மூன்றாம் அலை மீண்டும் பெரிய அளவில் வரும்பட்சத்தில் தற்போது வந்துள்ள ஜிடிபி வளர்ச்சி மீண்டும் குறையவே செய்யும் என்கிறார்கள் பொருளாதாரத் துறையினர்.
**-ராஜ்**
.�,