உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை!

public

கொரோனா பாதிப்பு குறைந்ததால், உச்ச நீதிமன்றத்தில் 17 மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசாரணை மட்டும் இன்று (செப்டம்பர் 1) முதல் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, விசாரணையை நேரடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, முதல்கட்டமாக குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டும் நேரடியாக விசாரிக்கலாம் என பரிந்துரை வழங்கியது.

இதையடுத்து, இன்று (செப்டம்பர் 1) முதல் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவித்துள்ளார். அதேநேரம் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்க விரும்பும் வழக்கறிஞர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, ஓர் அறையில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டிய வழக்குகள் மீதான விசாரணையை நேரடியாக நடத்த அனுமதி இல்லை. காணொலி மூலம்தான் விசாரணை நடைபெறும்.

ஒருவேளை நேரடியாக ஆஜராக விரும்பினால், ஒரு தரப்புக்கு ஒரு வழக்கறிஞர் அல்லது அவருடைய பதில் ஆள், ஒரு வாதாடும் வழக்கறிஞர் மற்றும் ஓர் இளம் வழக்கறிஞர், ஓர் உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *