சென்னையில் மண் சரிவில் சிக்கி ஒருவர் பலி!

public

சென்னை வண்ணாரப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்காகக் குழி தோண்டும்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கட்டடப் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று கட்டடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்காக கொடுங்கையூர் சின்னான்டி மடத்தைச் சேர்ந்த சின்னதுரை (22), ஆகாஷ் (22), வீரப்பன் (55), ஆகாஷின் தாய் லட்சுமி (42) ஆகியோர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆண்கள் மூவரும் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். லட்சுமி மேலே நின்று பணி செய்தார். அப்போது, அங்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதில் சின்னதுரை, ஆகாஷ், வீரப்பன் ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி சத்தமிட்டு அங்கிருந்தவர்களை அழைத்தார். இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த படையினர் வீரப்பன் மற்றும் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பள்ளத்தின் அடியில் மாட்டிக்கொண்ட சின்னதுரையை மூன்று மணி நேரமாக போராடி மீட்டனர்.

அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சின்னத்துரை உயிரிழந்தார். பெரும் போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்டட உரிமையாளர், கான்ட்ராக்டர் உள்ளிட்டோர் மீது தண்டையார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *