மதுரை ஆதீனத்தின் 293ஆவது பீடாதிபதியாக தான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக நித்தியானந்தா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் 1975ஆம் ஆண்டு முதல் 2021 ஆகஸ்ட் 13 வரை சுமார் 46 ஆண்டுகள் மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக இருந்து வந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார்.
மதுரை ஆதீன மடத்தின் ரகசிய அறையில் இருந்த அசையும் அசையா சொத்துகளின் பத்திரங்கள், ரொக்கப் பணம், தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் எடுத்து சரியாக இருப்பதாகக் கணக்கிட்ட பின்னர் அவை 293ஆவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் நித்தியானந்தா தன்னுடைய முகநூல் பக்கத்தில், மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான அருணகிரிநாதர் மறைவை அடுத்து கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். தனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இதற்கு பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து 2019ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி தொடர்பாக தொடர்ந்து நித்தியானந்தா சர்ச்சைகளை உருவாக்கி வரும் சூழ்நிலையில், முதலில் கைலாசாவை விட்டு மதுரைக்கு வாங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
**-வினிதா**�,