நாட்டில் மூன்றாவது அலை பரவுவதும், பரவாமல் இருப்பதும் மக்கள் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் உள்ளது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், மூன்றாவது அலை வரும் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது. அதனால், அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியாவுக்கு கல்வி நிறுவனம் ஒன்றின் சார்பில் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “மூன்றாவது அலையின் பரவல் எந்தவிதத்தில் இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது அலை போன்று மூன்றாவது அலை மோசமானதாக இருக்காது. தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்னும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. பெரியவர்கள் தடுப்பூசி போடுகிறார்கள், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடவில்லை. அதனால், புதிய அலை வந்தால், அதில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
அதேவேளையில் ஏற்கனவே 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டுள்ளதால், அவர்களின் உடலில் தற்போது நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளன. ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் செயல்பாட்டில் வந்துவிடும்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் தடுப்பூசியின் பங்கு பெரியது. தடுப்பூசி செலுத்திய பின்னரும் கொரோனா தொற்று ஏற்படுவது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு பாதிப்பு கடுமையாக இருக்காது. இறப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும். நோய்த்தொற்று இன்னும் முடிவடையவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளாதவர்கள். அதனால்தான் அதிகமான மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். கடுமையான பாதிப்பிலிருந்து தடுப்பூசி மக்களை காப்பாற்றுகிறது” என்று கூறினார்.
**-வினிதா**
�,