பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒருவர் கைது!

public

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பலரை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்துவந்த நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அப்போதைய அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, சதீஷ் மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி அருளானந்தத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தினசரி விசாரித்து 6 மாதத்தில் முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் பொள்ளாச்சி அருகே சூரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே கைதாகியுள்ள திருநாவுக்கரசு மற்றும் சதீஷின் நண்பர். சதீஷூடன் துணிக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *