சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

public

சுதந்திர தின விழா நெருங்குவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அல்வா, ஊறுகாய், ஜாம் ஆகியவற்றை எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தைச் சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், வியாபார நிறுவனங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு ஏழு அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை நுழைவுவாசல் பகுதியிலேயே பாதுகாப்பு படையினா் தடுத்து நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனா்.

மேலும், வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். விமான நிலைய காா் நிறுத்தம் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனை செய்து விசாரிக்கின்றனா்.

சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கு இம்மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். அதேபோல் பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒருமுறை பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது.

குறிப்பாக பயணிகளின் உடைமைகள் துருவி, துருவி சோதனை செய்யப்படுகிறது. பயணிகள் கைப்பைகளில் உணவுப்பொருட்களான ஊறுகாய், அல்வா, ஜாம் போன்ற பொருட்கள் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சரக்கக முனையத்தில் தீவிரமாக கண்காணித்து பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவு வரை இந்தப் பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *