ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்த ஆடி பௌர்ணமி நாளில் அம்பிகைக்குக் காட்சி தந்த இருவரும் இந்த நைவேத்தியத்தை விரும்பி உண்டார்கள் எனத் தென்மாவட்டப் பெரியோர்கள் சொல்வார்கள்.
சத்துள்ள இந்த உப்பு அடை குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நலம் அளிக்கக்கூடியது. உப்பு அடையை வைத்து சங்கர நாராயணரை வணங்கினால் நலன்கள் சேரும்; குறைகள் தீரும்.
**என்ன தேவை?**
பச்சரிசி மாவு (சலித்தது) – ஒரு கப்
காராமணி (சுத்தமாக்கியது) – அரை கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
**தாளிக்க**
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
பெருங்காயத்தூள் (விரும்பினால்) – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
காராமணியை வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். பிறகு, தண்ணீர் சேர்த்துக் குழைய வேகவைக்கவும். வெந்ததும் காராமணியில் உள்ள தண்ணீரை வடிக்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீர்விடாமல் அரைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக்கவும்.
கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின் அதோடு அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அந்த நீரில் குழைய வேகவைத்த காராமணி, வதக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் கலவையைச் சேர்க்கவும்.
இதில் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும். அப்போது இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவுக் கலவையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டவும். இந்த வடைகளை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான நோன்பு உப்பு அடை பூஜைக்குத் தயார்.
[நேற்றைய ரெசிபி: துள்ளு மாவு!](https://www.minnambalam.com/public/2021/07/23/1/thullu-mavu)
�,