ராமேஸ்வரத்துக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு ரயில்கள் ரத்து!

public

பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ராமேஸ்வரத்துக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தூக்குப்பாலம் வழியாக ரயில்கள் செல்லும்போது ஏதேனும் பாதிப்புகள் மற்றும் அதிர்வுகள் உள்ளதா என்பதை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் தூக்குப்பாலம் வழியாக வரும்போது சென்சார் கருவி ஒன்றில் இருந்து சத்தம் வந்ததுடன் லேசான அதிர்வும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உடனே ஐஐடி குழுவினர் அங்கு சென்று தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அதைத்தொடர்ந்து வருகிற 14ஆம் தேதி (நாளை) வரை பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரையிலும் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

சென்னை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்குப்பாலத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரையிலும் ரயில்வே துறையால் தெரிவிக்கப்படவில்லை. கடலில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாலப்பணியால் தூக்குபாலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது 105 ஆண்டுகளை கடந்து விட்டதால் தூக்கு பாலம் அதன் உறுதி தன்மையை இழந்து விட்டதா என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

**ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *