திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நைவேத்தியம் செய்யப்படும் முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை நான்கு மடங்கு உயர்த்தப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூஜைகள் நடந்து வருகின்றன. அர்ஜித சேவைகள் மற்றும் பூஜைகளின்போது மூலவர் ஏழுமலையானுக்கு வடை, அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி, லட்டு உள்பட 12 வகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக வைக்கப்படுகின்றன.
இந்தப் பிரசாதங்கள் கோயில் உள்ளே மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகின்றன. இந்த பிரசாதங்களின் விலையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நான்கு மடங்கு உயர்த்தியுள்ளது. முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய் இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய் இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடப்பது வழக்கம். அதில் மூலவருக்கு முறுக்கு, ஜிலேபி ஆகியவை நைவேத்தியம் செய்து, அவற்றை முன்பதிவு செய்த விஐபி பக்தர்களுக்கு மட்டும் கொடுப்பது வழக்கம். அதில் பிரசாதம் மீதியானால் தேவஸ்தான உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குவார்கள்.
ஒருசில நைவேத்திய பிரசாதம் எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்களுக்கு விற்கப்பட மாட்டாது. இனி இந்த நைவேத்திய பிரசாதங்கள் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. நைவேத்திய பிரசாதங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலருமான ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
�,