வேலை வாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் தொற்று அதிகரித்ததன் விளைவாக இந்திய விமானப் பயணிகளுக்கு அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கோல்டன் விசா வைத்துள்ளவர், தூதரகப் பணியாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினர் தவிர இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு விமானங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அமீரகத்தில் இருந்து மட்டுமே இந்தியர்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். அவ்வாறு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் அமீரகம் செல்ல முடியாத நிலை உருவானது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 23) முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவில் இருந்து துபாய்க்குச் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அமீரகத்தில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் – வேலை வாய்ப்பு விசா வைத்துள்ளவர்களுக்கு மட்டும் துபாய் செல்ல தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு துபாய்க்குச் செல்லும் இந்தியப் பயணிகள் அமீரகம் அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு), சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோஸ்களைச் செலுத்தி இருக்க வேண்டும். மேலும் க்யூ.ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்யும் வசதியுடன் கூடிய, 48 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுக்கான ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
பரிசோதனை முடிவுடன் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட ரேபிட் பிசிஆர் பரிசோதனையின் சான்றையும் வைத்திருக்க வேண்டும். அதையடுத்து துபாய்க்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கும் அங்குள்ள விமான நிலையத்தில் இலவச பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் முடிவுகளானது 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படும்.அதுவரை பயணி தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
இது குறித்த சுற்றறிக்கை பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தற்போது திருச்சி விமான நிலையத்தில் துபாய் செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,