�
சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. அதன்படி, முன்கள பணியாளர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து, பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், புறநகர் ரயில்களிலும் பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாளை முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம். பெண்கள், பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஆண்கள் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரயில் வரையிலும் பயணிக்கலாம். ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,