உலக அளவில் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவின் இடம் குறித்து ஐநா தெரிவித்துள்ளது.
உலகளாவிய முதலீட்டு அறிக்கையை ஐநா அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு 35 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு 1.5 லட்சம் கோடி டாலராக இருந்த உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு 1 லட்சம் கோடி டாலராக குறைந்துள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு 51 பில்லியன் டாலராக (3 லட்சத்து 77,400 கோடி ரூபாய்) இருந்தது. இது, கடந்த ஆண்டில் 64 பில்லியன் டாலராக (4 லட்சத்து 73,600 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தொழில்களில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்ததே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.
உலக அளவில் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடம் பிடித்திருப்பதாகவும் அறிக்கையில் ஐநா கூறியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளை பெருமளவு பாதித்து இருப்பதாகவும், இருப்பினும் இந்தியாவின் வலிமையான அடித்தளம் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்த நிலைக்கு மாறும் நாடுகள் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் மிகவும் மோசமாக தோல்வி அடைந்துள்ளன. ஐரோப்பிய யூனியன் 80 சதவிகித அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டை 2020ஆம் ஆண்டு குறைவாகப் பெற்றுள்ளது. ஆசியப் பகுதி மட்டும் 4 சதவிகிதம் கூடுதலாக முதலீட்டை பெற்றுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு அதிகம் பெற்ற நாடுகளில் சிங்கப்பூர் உச்சத்தில் உள்ளது. அதற்கடுத்து அமெரிக்கா, மோரீஷியஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
**-ராஜ்**
.�,