தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்க பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதுபோன்று, இந்தாண்டும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தங்கள் விநியோகிக்கப்படும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, காலணி,சைக்கிள்,லேப்டாப் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு ‘கண்ணொளி காப்போம்’ திட்டத்தின்கீழ் இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படவுள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் மாவட்ட திட்ட மேலாளர்களை தொடர்புகொண்டு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து கண் கண்ணாடி வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,