கொரோனா ஊரடங்கில் ஹோட்டல்களில் பார்சல் உணவுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘பார்சல்’ உணவுக்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரபல ஹோட்டல்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ‘பார்சலில் வாங்கிச்செல்லும் உணவுகளுக்கு முன்பு சேவை வரி விதிக்கப்படுவது இல்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததும், பார்சல் உணவுக்கும் சேவை வரி விதிக்கப்படுகிறது. பொதுவாக ஹோட்டலில் உட்கார்ந்து அங்குள்ள சேவைகளைப் பெறும்போதுதான் சேவை வரி விதிக்கப்பட வேண்டும். ஆனால், உணவை பார்சலில் வாங்கிச் செல்பவருக்கும் சேவை வரி வசூலிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்டி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது, ஜிஎஸ்டி சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பெரும்பாலான ஹோட்டல்களில் பார்சல் உணவுக்காக தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொலைபேசி, இ-மெயில் மற்றும் ஆன்லைன் மூலமாக உணவுப்பொருட்கள் ஆர்டர் செய்யப்படுகின்றன. இவ்வாறு ஆர்டர் செய்யப்படும் உணவுகள் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன, இதற்காக ஒவ்வொரு ஹோட்டல்களிலும் பார்சல் கவுன்டர்கள் சாப்பிடும் இடத்திலிருந்து தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்களில் உணவு தயாரிக்கப்பட்டு, உணவு உண்ண வருபவர்களுக்காக மேஜைகளில் பகிரப்படும்போது அவர்களுக்காக ஹோட்டல் ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். உணவு சாப்பிட வாடிக்கையாளர்களுக்காக பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஹோட்டல்கள் வழங்குகின்றன. அவர்கள் உணவை உண்டு முடித்து அதற்கான பில் போடும்வரை அவர்களுக்கு ஹோட்டல்கள் அளிக்கும் சேவைக்காக சேவை வரி விதிக்கப்படுகிறது.
ஆனால், உணவு மற்றும் குளிர்பானங்கள் பார்சலில் விற்பனை செய்யப்படும்போது ஹோட்டல்களில் சேவை தரப்படுவதில்லை. எனவே, அவை சேவை வரிக்குள் வராது. எனவே, ஹோட்டல்களில் பார்சல் மூலம் வாங்கும் உணவுப்பொருட்களுக்கு சேவை வரி விதிக்கக் கூடாது. அதற்கு சேவை வரி விதிக்கும் ஜிஎஸ்டி துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
**-ராஜ்**
.�,