மத்திய அரசு இதுவரை கொள்முதல் செய்த கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகளின் முழு விவரத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று (ஜூன் 2) டி.ஒய்.சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்தரபட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, தடுப்பூசி செலுத்துவதில் சீரற்ற தன்மை, தடுப்பூசி கொள்முதலில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்டவற்றை குறித்து மத்திய அரசிடம் நீதிபதிகள், அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்.
18 – 44 வயதுக்குட்பட்டோருக்கு, தடுப்பூசி போடுவதற்கு, கட்டணம் வசூலிப்பது தன்னிச்சையானது மற்றும் முறையற்றது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதை ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கக்கூடாது? கொரோனா தடுப்புப் பணிக்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் எப்படி செலவழிக்கப்பட்டது? அதில், 18-44 வயதினருக்கான தடுப்பூசியை வாங்க முடியாதா?
அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? எவ்வளவு கையிருப்புகள் இருக்கின்றன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தடுப்பூசி கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதி, ஒவ்வொரு தேதியிலும் எவ்வளவு தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டது? இதுவரை எத்தனை பேருக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது? கிராமப்புறங்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது? என எதுவும் விடுபடாமல் அனைத்து விவரங்களையும் இரண்டு வாரத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
**-வினிதா**
�,