திருப்பதியில் மலை மீது செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பாஸ்டேக் பதிவு செய்து வர வேண்டுமென அறிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குறைவான அளவு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் திருப்பதியில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே போக்குவரத்து மற்றும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து வசதி இல்லாததால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதேபோல் உண்டியல் வருமானம் கணிசமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது திருமலை மீது செல்லும் வாகனங்களுக்கு அலிபிரி டோல்கேட்டில் கார்களுக்கு ரூ.10, பஸ்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 1) முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மலைமீது செல்லும் வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே இனி திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பாஸ்டேக் பதிவு செய்து வர வேண்டுமென அறிவித்துள்ளனர்.
அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்லும் நடைபாதை நேற்று (ஜூன் 1) முதல் ஜூலை மாதம் 30ஆம் தேதி வரை இரண்டு மாதங்கள் மூடப்படுகிறது.
நடைபாதையில் சென்று பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டும் என்ற பக்தர்களை அலிபிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வரை இலவச பஸ்ஸில் அழைத்து சென்று அங்கிருந்து பக்தர்கள் திருமலைக்கு நடந்து சென்று தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,