சென்னையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறியும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிப்புப் பணியை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் 153 இடங்களில் போலீஸார் சோதனை சாவடி போன்று தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியே வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போலீஸாரின் வாகனத் தணிக்கை பணியை நேற்று (மே 29) நேரில் ஆய்வு செய்தார். அவர், அமைந்தகரை புல்லா அவென்யூ, அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ, கொரட்டூர் பாடி மேம்பாலம், அம்பத்தூர் எஸ்டேட் சிக்னல், எம்.கே.பி. நகர் அம்பேத்கர் கல்லூரி சந்திப்பு, வியாசர்பாடி அசோக் பில்லர் சந்திப்பு ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய கமிஷனர் சங்கர் ஜிவால், “முழு ஊரடங்கில் நடமாடும் மளிகைக் கடைகளுக்கு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவுள்ளோம். அத்தியாவசிய தேவைகளால் ஆம்புலன்ஸுகள், மருந்து வாகனங்கள் என நிறைய வண்டிகள் வருகின்றன. எனவே தேவைகள் அடிப்படையில் அந்தந்த வாகன சோதனை சாவடிகளில் மளிகை வாகனங்கள் பகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளன.
எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் இந்தப் பணிகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு, தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உரிய அடையாள அட்டை (பாஸ்) வழங்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக வார்டு வாரியாக இந்த ‘பாஸ்’கள் வழங்கினால் நன்றாக இருக்கும். சென்னையில் போலீஸார் அதிகளவு பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். வரும் நாட்களில் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அந்தவகையில் 22,000 போலீஸார் பாதுகாப்பு – கண்காணிப்புப் பணியில் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**�,