தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (மே 22) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரும். இது மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிசா- வங்க தேசக் கரையை 26ஆம் தேதி கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில், வெப்பச் சலனம் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் மே 26ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,