ஈரோடு மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அளித்து மாவட்ட எஸ்.பி. தங்கதுரை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பரவல் 33 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பினால் அதிகளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாலும், முன்கள பணியாளர்களான சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உயிரிழப்பதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரையை சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகபிரியா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மருத்துவர்களுக்கு கொரோனா பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொரோனா பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து, சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
தற்போது ஈரோடு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பெருந்தொற்று பரவி வரும் இந்த காலத்தில் ஈரோடு மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் பெண் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி காவலர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு மறு உத்தரவு வரும் சிறப்பு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,