மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்!

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று(மே 16) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும்.
தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சிறப்பு கவுண்டர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-வினிதா