கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து நாட்டு மருந்துக் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று வராமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தற்போது பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு அதிகளவு ஆர்வம்காட்டி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் தங்கள் உணவு பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அரசின் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் மக்களும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள முன்வருகின்றனர்.
இதனிடையே ஆரம்பத்திலேயே சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனாவில் இருந்து பாதுகாக்க பெரும்பாலானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக நாட்டு மருந்துக் கடைகளில் கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளன. கபசுர குடிநீருக்கான பொடியை அதிக அளவில் வாங்கிச்சென்றதைக் காண முடிகிறது.
**-ராஜ்**
.�,