இந்தியாவில் கொரோனா தொற்றால் இந்தாண்டில் மட்டும் 126 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைகின்றனர். இந்த காலக்கட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை மட்டுமில்லாமல், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. தங்கள் உயிரையும் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். கொரோனாவால் மருத்துவர்களும் பலியாகியுள்ளனர்.
இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ரவி வான்கேட்கர் கூறுகையில், ” கொரோனாவால் உயிரிழந்த சுகாதார ஊழியர்கள் குறித்தும், தடுப்பூசி தரவுகள் குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகாரபூர்வமான தரவுகளை பராமரித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. அதனால், இந்த தகவல்களை இந்திய மருத்துவ கழகம் சேகரித்து வருகிறது.
நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீஸ் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, இதுவரை 94 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டுள்ளனர். 63.5 லட்சம் பேர் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டுள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மருத்துவ கழகம் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் இந்த ஆண்டில் மட்டும் 126 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பீகாரில் மட்டும் 49 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு 734 மருத்துவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
.�,