{செக் மோசடி வழக்குகளை விசாரிக்க புதிய விதிகள்!

public

செக் மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செக் மோசடி வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக கடந்த மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் பிறப்பித்த உத்தரவில், “செக் மோசடி போன்ற வழக்குகளை விரைவில் விசாரிக்க பரிந்துரைகளை வழங்க மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.சி.சவுகான் தலைமையில் குழுவை அமைக்கிறோம். நாடு முழுவதும் நிலுவையில் உள்ள செக் மோசடி வழக்குகளை விரைவில் விசாரிப்பதற்கான பரிந்துரைகளை இக்குழு மூன்று மாதத்துக்குள் அளிக்கும்” எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, “செக் மோசடி வழக்குகளில் உடனடியாக விசாரணையைத் தொடங்காமல், குற்றம்சாட்டப்பட்டவருக்கு முதலில் சம்மன் அனுப்ப வேண்டும். சம்மனுக்குக் கிடைக்கும் பதிலை வைத்து விசாரணையைத் தொடங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். மேலும், விசாரணை நீதிமன்றங்களுக்கு நடைமுறை உத்தரவுகளை உயர் நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்.

செக் மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் நபர் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பால் வசிக்கும்போது, போதுமான முகாந்திரங்கள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே வழக்கு விசாரணையை நடத்த வேண்டும். செக் மோசடி வழக்குகளில் சாட்சியாக உள்ள புகார்தாரர் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தையே சாட்சியாகக் கொள்ள வேண்டும். புகார்தாரரை உச்ச நீதிமன்றத்துக்கு அழைக்கவேண்டிய அவசியமில்லை.

ஓராண்டுக்குள் ஒரே பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒரே நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் செக் மோசடி வழக்குகள் அனைத்தையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் இருத்தல் வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம். செக் மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக அளிக்கப்படும் ஒரு சம்மனை, அவர் தொடர்புடைய அனைத்து செக் மோசடி வழக்குகளுக்கும் சம்மனாக கருத வேண்டும் என தெரிவித்து விசாரணை நீதிமன்றங்களுக்கு நடைமுறை உத்தரவுகளை உயர் நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்.

மேலும், இந்த விவகாரத்தை எட்டு வாரங்கள் கழித்து, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பட்டியலிடவும்” என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தம் 35 லட்சம் செக் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இந்த வழக்குகளை விரைவில் விசாரிக்கக் கூடுதல் நீதிமன்றங்களை ஏற்படுத்த முடியுமா?’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கவை.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *