ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பொதுத் தேர்வை எழுதும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு வரை பள்ளி மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டு வந்தது. அதனால், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கொரோனா பரவல் குறித்து சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்கப்பட்டது. அறிக்கை அளிக்கப்பட்ட பின்பு, அதனடிப்படையில் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டிருந்தது. அதில், தேர்வின்போது மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்களை பல பிரிவுகளாகப் பிரித்து செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். செய்முறைத் தேர்வுக்கு முன்னரும், பின்னரும் அறையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். செய்முறைத் தேர்வின்போது PIPETTE க்கு பதில் BURETTE பயன்படுத்தலாம். ஆய்வக அறையில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் அருகே சானிடைசரை வைக்கக்கூடாது. மாணவர்கள் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த உடனே தீப்பற்றக் கூடிய பொருட்களை தொடாமல் கவனமாக இருக்க வேண்டும். செய்முறை தேர்வு நடைபெறும்போது கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் ஆய்வகத்தில் திறந்திருக்க வேண்டும். கொரோனா தொற்றுள்ள மாணவர்களுக்கு வேறொரு நாளில் செய்முறை தேர்வு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மே 3 ஆம் தேதி திட்டமிட்டப்படி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு திறன்களை அறியும் வகையில் தேர்வு நடத்த வேண்டும். 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்விகளை அனுப்பி வாட்ஸ்அப் மூலமாக பதில்களை பெற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்பித்து வருவதால், அவர்களின் கற்றல் திறனை அறிவதற்காக இந்த தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பத்தாம் வகுப்பில் சேர்ப்பது குறித்தும், பத்தாம் வகுப்பு மாணவர்களை பதினோராம் வகுப்பில் அனுமதிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**வினிதா**
�,